ஆலயங்களில் குத்துவிளக்குகள், மின்பிறப்பாக்கியின் செம்புக்கம்பிகளை திருடிய இரு இளைஞர்கள் கைது

19 0

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி, மஞ்சம்தொடுவாய் பிரதேசத்திலுள்ள இரு ஆலயங்களில் செம்பிலான குத்துவிளக்குகள் மற்றும் மின்சார சபையின் மின்பிறப்பாக்கியில் உள்ள செம்புக்கம்பிகளை திருடிவந்த 26 வயதுடைய இருவரை நேற்று வியாழக்கிழமை (2) இரவு கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி.கஜநாயக்க தெரிவித்தார்.

நேற்று டச் பார் வீதியிலுள்ள சிந்தாமணி பிள்ளையார் ஆலயம் மற்றும் மஞ்சம்தொடுவாயிலுள்ள வீரபத்திரர் ஆலயங்களில் பூட்டப்பட்ட கதவுகளை உடைத்து, உள்ளிருந்த செம்பிலான குத்துவிளக்குகள் மற்றும் மின்சார சபையின் மின்பிறப்பாக்கியில் உள்ள செம்புக்கம்பிகள் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இது தொடர்பான பொலிஸ் விசாரணைகளையடுத்து, கல்லடி தரிசணம் வீதி நொச்சிமுனையை சேர்ந்த 26 வயதுடைய இளைஞரையும் மட்டக்களப்பு நகர் மத்தியஸ்தர் வீதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரையும் நேற்று பொலிஸார் கைது செய்ததோடு,  திருடப்பட்ட பொருட்களையும் அவர்களிடமிருந்து கைப்பற்றியுள்ளனர்.

கைதான இருவரையும் விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார்  தெரிவித்தனர்.