பட்டித்திடல் படுகொலையின் 37வது நினைவு !

33 0

பட்டித்திடல் பகுதியில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தில் கொல்லப்பட்ட உறவுகளுக்கு இதுவரை எவ்வித நீதியும் கிடைக்கவில்லை நிவாரணங்களும் கிடைக்கவில்லையென கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

பட்டித்திடல் கிராமத்தில் இடம்பெற்ற படுகொலையின்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர் படு கொலை செய்யப்பட்டிருந்தனர்.

கடந்த 26 ஆம் திகதியுடன் 37வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. எனினும் இதுவரை பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு எவ்வித நீதியும், நிவாரணங்களும் கிடைக்கபெறவில்லை என பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பட்டித்திடல் கிராமத்தில் 26.04.1987 ஆம் ஆண்டு இறைவழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஒரே குடும்ப உறுப்பினர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

அதில் மூன்று கைக்குழந்தைகளும் பாடசாலை மாணவ, மாணவிகளும் அடங்குவர். தாக்குதல் நடந்த வீட்டிலிருந்து கோணன் உலகநாதன் மற்றும் மேரி கணேசபிள்ளை ஆகியோர் மட்டுமே உயிர் தப்பியிருந்தார்கள்.

 

குறித்த கொலைச் சம்பவம் நடைபெற்ற தினத்தன்று காலை பட்டித்திடலுக்கு அண்மித்த பகுதியின் திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் வைத்து கண்ணிவெடி தாக்குதலில் சில இராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்தனர்.

இதன் பின்னணியிலேயே இப்படுகொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இந்த கொலைச்சம்பவத்தின்போது அவர்களது உறவினரான மேரி கணேசபிள்ளை என்ற 50 வயது பெண் ஒருவர் வீட்டில் இருந்து ஓடிச்சென்று மரங்களுக்குள் ஒழிந்து கொண்டு நடந்த சம்பவத்தை பார்த்ததாக அப்போதைய பத்திரிகைகளுக்கு அவர் இவ்வாறு வாக்குமூலம் வழங்கியிருந்தார்,

இராணுவம் உள்ளே நுழைந்தவுடன் வீட்டின் பெரியவரும் அவருடைய மகனும் பேசத் தொடங்கினார்கள். ஆனால் இராணுவத்தினர் உடனடியாக சரமாரியாக சுடத் தொடங்கி விட்டனர். பின்னர் பெண்களின் அவலச் சத்தம் கேட்டது. மறுபடியும் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. பெண்கள் மட்டும் துப்பாக்கியால் சுடப்பட்ட காயங்களுடன் தள்ளாடியபடி வீட்டுக்கு வெளியே வந்தனர். ஆனால் இராணுவத்தினர் அவர்கள்மீது பனை ஓலைகளை அடுக்கி எண்ணை ஊற்றி தீயை வைத்தனர். பின்னர் வீட்டுக்கும் தீயை வைத்துவிட்டு அவர்கள் வந்த லொறியில் ஏறிச் சென்றுவிட்டனர் என்று அப்பெண் கூறினார்.

 

இச்சம்பவத்தில் கொல்லப்பட்டோர்

01. உலகநாதன் ஜெயப்பிரியா (வயது 06)

02. உலகநாதன் ஜெயரதி (வயது 01)

03. உலகநாதன் யோகேஸ்வரி (வயது 26)

04. கோணன் பத்தினியன் (வயது 42)

05. பத்தினியன் சீதையம்மா (வயது 34)

06. பத்தினியன் நேசன் (வயது 17)

07. பத்தினியன் பிரகாஸ் (வயது13)

08. பத்தினியன் சோபனா (வயது  12)

09. பத்தினியன் கிருசாந்தி (வயது 10)

10. பத்தினியன் அற்புதராசா (வயது 8)

11. கோணன் பொன்னம்மா (வயது 60)

12. கோணன் மேரி (வயது 23)

13. சின்னத்துரை யோகேஸ்வரி (வயது 29)

14. சிந்தாமணி பாலமுருகன் (வயது 11)

15. சிந்தாமணி யோகராசா (வயது 14)

16. சிந்தாமணி கோகுலேஸ்வரி (வயது 15)

17. சிந்தாமணி செந்தில்மணி (வயது 30)