மேல்மருவத்தூரில் ஆயுர்வேத மருத்துவமனை தொடக்கம்: நவீன மருத்துவத்தின் சிறப்புகளோடு சிகிச்சை

15 0

ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் அருளாசியுடனும் லட்சுமி பங்காரு அடிகளார் நல்லாசியுடனும் சுயம்பு ஆயுர்வேத சிறப்பு மருத்துவமனை நேற்று மேல்மருவத்தூரில் தொடங்கப்பட்டது.

ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரி தாளாளர் டாக்டர் டி.ரமேஷ்மற்றும் டாக்டர் இ.சேது கிருஷ்ணா,சகுந்தலா சேது கிருஷ்ணா முன்னிலையில் ஆதிபராசக்தி குழுமப் பள்ளிகளின் தாளாளர் பி.தேவி ரமேஷ் குத்துவிளக்கேற்றி மருத்துவமனையை திறந்து வைத்தார்.பங்காரு அடிகளார் அருளிய இயற்கை மருத்துவத்தின் அடையாளமாகத் தொடங்கப்பட்டுள்ள இந்த சுயம்புஆயுர்வேத சிறப்பு மருத்துவமனைஆன்மிக பாரம்பரியமும், ஆயுர்வேதத்தின் சிறப்பியல்புகளும் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள தாக தேவி ரமேஷ் தெரிவித்தார்.

மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் இ.சேது கிருஷ்ணா கூறும்போது, “அன்னையின் அருளாசியுடன் மருவத்தூரில் இந்த மருத்துவமனையைத் தொடங்குவதில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன். இங்கு சிகிச்சை அளிப்பவர்கள் அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள்” என்று தெரிவித்தார்.

மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் டி.ரமேஷ் பேசும்போது, “பங்காரு அடிகளார் முதன்முதலில் மருத்துவமனை தொடங்கிய அதே இடத்தில் மருத்துவமனை தொடங்கப்படுவதில் மகிழ்ச்சி. நவீன மருத்துவத்தின் சிறப்புகளோடு மருத்துவமனை மிகச் சிறப்பாகச் செயல்பட்டு மக்களுக்கு நல்ல சிகிச்சையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும்” என்று கூறினார்.

தொடக்க விழாவில் ஆதிபராசக்தி மருத்துவமனை, ஆதிபராசக்தி பல்மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, செவிலியர் கல்லூரி, பிஸியோதெரபி கல்லூரி முதல்வர்கள், துறைத் தலைவர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழா ஏற்பாடுகளை வைத்தியநாதன் தலைமையிலான ஊழியர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.