மதுரையை சேர்ந்த தம்பதியினர் சொந்த ஊரில் வந்து மஞ்சப்பை விற்பனை செய்து கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியினர் கௌரி கோபிநாத், கிருஷ்ணன் சுப்ரமணியன். இதில், கௌரி கோபிநாத் பெங்களூருவில் உள்ள கார்ப்பரேட் நிறுவனத்திலும், கிருஷ்ணன் சுப்ரமணியன் சென்னையில் உள்ள கார்ப்பரேட் நிறுவனத்திலும் வேலை செய்து வந்தனர்.
இவர்கள் இருவரும் சொந்த ஊருக்கு எப்போது செல்லலாம் என்று காத்திருந்தனர். அப்போது தான், இவர்கள் இருவருக்கும் நகரங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாக இருப்பதால் பிளாஸ்டிக் மாசைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று தோன்றியது.
இதனால், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் அபாயத்தை தடுக்க வேண்டும் என்று நினைத்தனர். பின்னர், 2014 -ம் ஆண்டில் எல்லோபேக் என்ற பை தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினர்.
ஆரம்பத்தில் இவர்கள் இதை பற்றி நண்பர்களிடம் எடுத்துரைத்து அவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் துணிப்பையை பயன்படுத்துமாறு அறிவுறுத்தினர். உள்ளூரில் உள்ள டெய்லர்களை வைத்து துணிப்பையை தைத்து வந்தனர்.
பின்னர், 2019 -ம் ஆண்டு தாங்கள் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு முழுமையாக இந்த தொழிலில் இறங்கினர். பின்னர் மஞ்சப்பையை தனது பிராண்டு (Brand) பெயராக மாற்றினர்.
சணலும் பருத்தியாலும் கலந்து பேக்கேஜிங் பைகள், கார்மென்ட் வைக்கும் பைகள், தொங்கும் கைப்பைகள் என பல்வேறு பைகளை தயாரித்தனர். இதன் விலையானது ரூ.20 முதல் ரூ.200 -க்கு விற்கப்பட்டது.
இதற்காக ஒரு இணையதளத்தையும் தொடங்கி சமூக வலைதளங்களில் மார்க்கெட்டிங் செய்து வந்தனர். நாள் ஒன்றுக்கு 2000 முதல் 3000 பைகளை விற்பனை செய்து இந்த ஆண்டில் ரூ.3 கோடி வருமானத்தை பெற்றனர்.
இவர்களிடம், ஜவுளிக்கடைகள், ஹொட்டல்கள், வணிக நிறுவனங்கள், பள்ளிகள் பைகளை ஓர்டர் செய்து வருகின்றனர்.