ஒரே வருடத்தில் 1.12 கோடி மரக்கன்றுகள் உலக சாதனை படைத்த காவேரி கூக்குரல் இயக்கம்

19 0

 காவேரி கூக்குரல் இயக்கத்தின் விடாமுயற்சியால் கடந்த நிதியாண்டில் 48,748 விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சுமார் 28,000 ஏக்கர் பரப்பளவில் ஒரு கோடியே 12 லட்சத்து 47 ஆயிரத்து 630 மரக்கன்றுகளை தங்கள் நிலங்களில் நட்டுள்ளனர். இவ்வியக்கத்தின் மூலம் இதுவரை நடப்பட்ட மரக்கன்றுகளின் மொத்த எண்ணிக்கை 10.9 கோடியாக உயர்ந்துள்ளது.

உலக பூமி தினமான இன்று(ஏப்ரல் 22) இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் இவ்வியக்கத்தின் மாநில கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் கூறியதாவது:

காவேரி கூக்குரல் இயக்கம் சத்குருவால் 26 ஆண்டுகளுக்கு முன்பு விதைக்கப்பட்ட விதையாகும். 1998-ம் ஆண்டுமுதல் ஈஷா பல்வேறு சுற்றுச்சூழல் பணிகளை வெவ்வேறு பெயர்களில் செய்து வருகிறது. அதில் ஓர் அங்கமாக, தமிழகத்தின் பசுமைப் பரப்பை அதிகரித்தல், நதிகளுக்குப் புத்துயிர் அளித்தல், விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துதல் போன்ற நோக்கங்களுக்காக காவேரி கூக்குரல் இயக்கம், மரம் சார்ந்த விவசாய முறையை விவசாயிகளிடம் ஊக்குவித்து வருகிறது.

கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஈஷா நர்சரிகள் செயல்படுகின்றன. இதுதவிர 39 இடங்களில் விநியோக நர்சரிகளை நடத்தி வருகிறோம். இங்குதேக்கு, செம்மரம், சந்தனம், ரோஸ்வுட் உட்பட 29 வகையான விலை உயர்ந்த மரக்கன்றுகளை ரூ.3 என்ற மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கி வருகிறோம். மேலும், விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் அளிக்கும் விதமாக, அவர்களே மரக்கன்றுகளை உற்பத்தி செய்துவிநியோகிப்பதற்கான வாய்ப்பையும் வழங்கி வருகிறோம்.

காவேரி கூக்குரல் இயக்கத்தில் மொத்தம் 130 களப் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் விவசாய நிலங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து மண் மற்றும் நீரின் தன்மையை ஆராய்ந்து அதற்கேற்ப மர விவசாயம் செய்வதற்கு இலவச ஆலோசனைகளை வழங்குகின்றனர். இதுதவிர, கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் 3 மிகப்பெரிய கருத்தரங்குகளையும், 12 மண்டல அளவிலான கருத்தரங்குகளை நடத்தினோம்.

இந்த மாதம் தொடங்கியுள்ள நடப்பு நிதியாண்டில் (2024-25) காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.