வடமாகாணத்தில் மாத்திரம் 780 மாணவர்கள் பாடசாலை கல்வியை இடையிலேயே நிறுத்தியுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் வலியுறுத்தியுள்ளார்.
யாழில் இடம்பெற்ற NVQ 4ஆம் தரத்திற்கான பட்டமளிப்பு விழா நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நாட்டிலே பாடசாலைக்கு செல்கின்ற மாணவர்கள் இடையிலேயே பாடசாலை கல்வியை நிறுத்திக் கொள்வதை அவதானிக்க முடிகிறது.
அன்மையில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரும், பிரதம செயலாளரும் என்னிடம் கூறிய விடயத்தில் வடக்கு மாகாணத்தில் 780 மாணவர்கள் பாடசாலையில் இருந்து தங்களுடைய கல்வியை இடைநிறுத்தி இருக்கின்றார்கள் என்பதை அறிய முடிந்தது.
நேற்று அந்த அறிக்கையை மீளமைத்து என்னிடம் கூறியிருக்கின்றார்கள் 611 மாணவர்கள் கல்வியை இடைநிறுத்தி இருக்கின்றார்கள்.
ஏனைய மாணவர்கள் பாடசாலைக்கு மீண்டும் சென்றிருக்கின்றார்கள் என்று.
இதேபோன்று கா.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்திபெறாத மாணவர்கள், கா.பொ.த உயர்தர பரிட்சையில் சித்தி அடையாத மாணவர்கள், பல்கலைக்கழக கல்வியை பெற முடியாதவர்கள் என்று பலர் வருடாந்தம் எங்களுடைய இளைஞர் தொகைக்குள்ளே சேர்க்கப்படுகின்றனர்.
இலங்கையை பொறுத்த வரையில் குறிப்பாக வடக்கு மாகாணத்தில் அனைவரும் நினைப்பது தாங்கள் அல்லது தங்களுடைய பிள்ளைகள் பொறியியலாளராக அல்லது வைத்தியராக வரவேண்டும் என்று.
அந்தக் கனவு தவறு என்றோ குறை என்றோ நாங்கள் இங்கு கூறவில்லை.
ஆனால் அதை எய்த முடியாதவர்கள் அடுத்த கட்டமாக தங்களுடைய வாழ்க்கைக்கு தேவையான தொழில் தகைமையை பெற்றுக் கொள்வதற்கான வழி வகைகளை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை.
இதற்கமையவே அரசாங்கம் தற்போது பல்வேறு வகைகளிலே தொழில்நுட்ப கல்விகளின் ஊடாக, கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக NVQ என்கின்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கின்றது முக்கியமாக இங்கு வழங்கப்பட்ட சான்றிதழ்கள் மனை பொருளியல் சார்ந்த சான்றிதழ்களாகவும், அவர்கள் இயல்பாகவே தங்களுடைய தொழில்களை சுயமாக மேற்கொள்வதற்கு அவர்களுக்கு தேவையான பயிற்சியையும் அறிவையும் தொழில்நுட்பத்தையும் வழங்கி இருப்பதாக இங்கு கூறியிருக்கின்றார்கள்.
அந்த வகையிலே NVQ நான்கு என்பது ஒரு மாணவன் க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தி அடைந்ததற்கு சமமாக இது கருதப்படுகின்றது, அதேபோன்று ஐந்து என்பது டிப்ளமோ தரத்திலாகவும், ஆறு என்பது உயர் டிப்ளமாவாகவும், ஏழு என்பது பட்டப்படிப்பாகவும் கணிக்கப்படுவதாக இப்போது இங்கே இருக்கின்ற உத்தியோகத்தர்கள் என்னிடம் தெரிவித்துள்ளனர்” என்றார்.