பிரான்ஸ் மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு ஒத்துழைப்பு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் உயர் அனர்த்த முகாமைத்துவ மீட்பு ஆகிய துறைகளில் மூலோபாய ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
பிரான்ஸின் இலங்கைக்கான தூதுவர் ஜீன் பிரான்கோயிஸ் பேக்டெட் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று கொழும்பில் இடம்பெற்ற போதே இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சுக்கு வருகை தந்த பிரான்ஸ் தூதுவர் பேக்டெட் இராஜாங்க அமைச்சரினால் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து இருவருக்குமிடையில் சுமூகமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
பிரான்ஸ், இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்பு மற்றும் உதவிக்கு நன்றி தெரிவித்த இராஜாங்க அமைச்சர், தற்போதுள்ள உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்காக நெருக்கமாக பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது பிரான்ஸ் தூதரகத்தின் பிரதித் தூதுவர் மேரி-நோயல் டூரிஸ் மற்றும் கடல்சார் பாதுகாப்புக்கு பொறுப்பான இராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு அதிகாரி கொமாண்டர் ஜீன்-பாப்டிஸ்ட் ட்ரூச் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

