ஆர்.கே.நகர் தொகுதியில் 63 பேருக்கு மேல் போட்டியிட்டால் வாக்குச்சீட்டு முறையில் ஓட்டுப்பதிவு

348 0

ஆர்.கே.நகர் தொகுதியில் 63 பேருக்கு மேல் வேட்பாளர்கள் போட்டியிட்டால் வாக்குச்சீட்டு முறையில்தான் ஓட்டுப்பதிவு நடத்த முடியும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 12ம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் முடிந்தது. மொத்தம் 127 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீது ஆர்.கே.நகர் தொகுதிக்காக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் நடத்தும் அதிகாரி பிரவீன்நாயர் தலைமையில்  பரிசீலனை நடைபெற்றது. அப்போது, சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் உள்ளிட்ட 45 மனுக்கள், தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட முழுமையான ஆவணங்களை சமர்ப்பிக்காததால் தள்ளுபடி செய்யப்பட்டது.

திமுக வேட்பாளர் மருதுகணேஷ், அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டி.டி.வி.தினகரன், அதிமுக புரட்சி தலைவி அம்மா கட்சி வேட்பாளர் மதுசூதனன் உள்பட 82 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. வேட்புமனுக்களை நாளை மறுதினம் வரை வாபஸ் வாங்கலாம். அன்றைய தினம் மாலை இறுதி வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்படும். தற்போது ஆர்.கே.நகர் தொகுதியில் 82 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதில் 12 பேர் மாற்று வேட்பாளர்களாக உள்ளனர். இந்த மாற்று வேட்பாளர்கள் நாளை அல்லது நாளை மறுதினம் வாபஸ் வாங்குவார்கள். மேலும் சிலரும் வாபஸ் வாங்கலாம்.

இறுதியாக 63 வேட்பாளர்களுக்கும் குறைவானவர்கள் களத்தில் இருந்தால் மட்டுமே, தேர்தலின்போது வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்த முடியும். இல்லையென்றால் வாக்குச்சீட்டு முறையில்தான் ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடத்தும் நிலை ஏற்படும். இதுகுறித்து தேர்தல் அதிகாரி ஒருவர் கூறும்போது, “தற்போது இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் வாக்குப்பதிவு எந்திரமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஒரு கட்டுப்பாடு எந்திரத்தில் 4 ஓட்டுப்பதிவு எந்திரங்களை இணைக்க முடியும். ஒரு ஓட்டுப்பதிவு எந்திரத்தில் 16 வேட்பாளர்களின் பெயர் மற்றும் அவர்களின் சின்னம் மட்டுமே பொருத்த முடியும்.

மொத்த வேட்பாளர்களுக்கு அடுத்த வரிசை நோட்டோ (யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை) என்ற சின்னத்துக்கு வாக்களிக்க இடம் அளிக்கப்படும். இப்படி ஒவ்வொரு ஓட்டுப்பதிவு எந்திரத்தில் 16 என்ற அடிப்படையில் 4 எந்திரத்தில் மொத்தம் 63 வேட்பாளர் மற்றும் 64வது இடத்தில் நோட்டோ இடம் பெறும். ஆனால் தற்போது ஆர்.கே.நகர் தொகுதியில் 82 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. இன்னும் 2 நாளில் குறைந்தபட்சம் 19 வேட்பாளர்கள் வாபஸ் வாங்கினால் மட்டுமே வாக்குப்பதிவு எந்திரம் மூலம் தேர்தல் நடத்த முடியும். இல்லையென்றால் ஓட்டுச்சீட்டு முறையிலேயே தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்படும்” என்றார்.