நீதிபதிக்காக நீதி கேட்கும் இந்த நாட்டில் சாதாரண மக்களுக்கு நீதி கிடைக்குமா ?முல்லைத்தீவில் கண்டன போராட்டம்

145 0

நீதிபதி ரீ.சரவணராஜாவிற்கு நீதி கோரி முல்லைத்தீவில் கண்டன போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் முல்லைத்தீவு இளைஞர்களின் ஏற்பாட்டில் இன்றையதினம் (09.10.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று காலை 10.15 மணியளவில் கறுப்பு துணியால் வாயினை கட்டியவாறு அமைதியாக கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

இதன் பின்னர் மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனிம், நீதி அமைச்சின் செயலாளருக்கு கையளிக்க மகஜரொன்றையும் கையளித்துள்ளனர்.

முல்லைத்தீவில் திட்டமிட்டு நடத்தப்படும் அத்துமீறிய குடியேற்றம் மற்றும் நீதிபதிக்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல், அத்தோடு இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளமை என்பவற்றை வலியுறுத்தி இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது போராட்டக்காரர்கள் நீதிபதிக்காக நீதி கேட்கும் இந்த நாட்டில் சாதாரண மக்களுக்கு என்ன நீதியோ?, நீதியின் கழுத்தில் தூக்கு கயிறு, தீர்ந்து போனதா நியாயத்தின் உணர்வு, நீயும் பெண்தானே நீதி கிடைக்காத பெண்களுள் நீயும் ஒருதியோ? நீதி தேவதையே, தொடர்ந்து நடந்தேறும் நீதி புரள்வுகளுக்கு என்ன தீர்ப்பு நீதி அமைச்சே? போன்ற பல்வேறு வாசகங்களையுடைய பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.