தனிப்பட்ட தரவு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி விக்கிரமசிங்கவால் விசேட குழு நியமனம்

246 0

தனிநபர் தரவுகளைப் பாதுகாப்பதற்காக நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்காக தலைவரொருவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபையை நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஜனாதிபதி அலுவலகப் பிரதானி சாகல ரத்நாயக்க மற்றும் தொழிநுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் ஆகியோரது பங்குபற்றலுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார்.

அதற்கமைய தனிநபர் தரவுகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளுக்கான தலைவராக அர்ஜூன ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளதோடு, பணிப்பாளர் சபையின் உறுப்பினராக ஜனநாத் பெர்னாண்டோ, சுலக்ஷன ஜயவர்தன, சௌமியா அமரசேகர, ஹேஷான் விஜேதிலக, பிசர செனவிரத்ன மற்றும் நிஷித் அபேசூரிய ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம் 2022 ஆரம்பத்தில் நிறைவேற்றப்பட்டு நீண்ட காலம் சென்றுள்ள போதிலும், இன்னும் நடைமுறைப்படுத்தப்படாமலுள்ளதனால் இவ்வாறு பணிப்பாளர் சபையொன்றினை நியமிப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த சட்டத்தின் மூலம் தனிநபர் தரவுகள் பாதுகாக்கப்படும் அதே வேளை, அந்த தரவுகளை தவறான முறையில் பரிமாற்றுபவர்களை தண்டிக்கும் அதிகாரத்தை தனிநபர் தரவு ஆணைக்குழு கொண்டுள்ளது. இந்த ஆணைக்குழுவினை நிறுவுதல், அலுவலகத்தை நிர்வகித்துச் செல்லல் என்பன இந்தக்குழுவால் முன்னெடுக்கப்படும்.

இந்தக்குழுவுக்கு தேவையான ஒத்துழைப்புக்களை ஜனாதிபதி அலுவலகப்பிரதானி சாகல ரத்நாயக்கவின் தலையீட்டுடன், ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உலன வங்கி ஆகியவை இணைந்து வழங்கவுள்ளன.

இதுவரைக் காலமும் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம் இல்லாததன் காரணமாக, வெளிநாட்டு தகவல் தொழிநுட்ப நிறுவனங்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு விரும்பவில்லை. எனவே தற்போது இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளமையால் அந்தத் தடையும் நீங்கியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.