அதிபர் ஆசிரியர்கள் கொழும்பில் பாரிய போராட்டத்திற்கு அழைப்பு

54 0

அதிபர் ஆசிரியர்களின் சம்பள நிலுவைகளை கோரி இம் மாதம் ஒக்டோபர் 24ஆம் திகதி கொழும்பு மத்திய கல்வி அமைச்சுக்கு முன்னாள் இடம் பெறும் பாரிய போராட்டத்தில் அனைத்து ஆசிரியர் மற்றும் அதிபர்களை கலந்து கொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் ஜெயராயசிங்கம் கோல்வின் அழைப்பு விடுத்தார்.

இன்று சனிக்கிழமை (07) யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் அதிபர் மற்றும் ஆசிரியர்களின் சம்பள நிலுவை தீர்க்கப்படாமல் உள்ளதால் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் ஆசிரியர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.

சம்பள நிலுவை தொடர்பில் அரசாங்கத்துடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் பேச்சுவார்த்தை நடத்திய போதும் இதுவரை தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படவில்லை.

சென்றவருடம் ஆசிரியர்களின்  சம்பள நிலுவை கோரி கொழும்பில் பாரியபோராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் சில கோரிக்கைகளை மட்டும் அரசாங்கம் நிறைவேற்றியது.

ஆனால், அதிபர் ஆசிரியர்களின் ஏனைய நிலுவைகள் மற்றும் நிர்வாகப் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் உள்ளமையால் அவற்றை தீர்க்கும் முகமாக அரசாங்கத்திற்கு அழுத்தம் வழங்குவதற்காக போராட்டத்தை ஒழுங்கு பண்னியுள்ளோம்.

பல ஆசிரியர்கள் தமது பிரதேசங்களை தாண்டி வெளி மாவட்டங்களில் ஆசிரியர்களாக கடமையாற்றி வரும் நிலையில் அவர்களுக்கு வழங்க வேண்டிய  இருபது ஆயிரம் ரூபாய் நிலுவையை அரசாங்கம் வழங்க வேண்டும்.

மேலும், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அதிகமான அதிகமான சப்பாத்துக்களைப் பெற்றுக் கொள்வதில் நெருக்கடிகளை எதிர் நோக்குகின்ற நிலையில் மானிய விலையில் பாதானிகளை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அது மட்டுமல்லாது பெற்றோர்களிடமிருந்து பாடசாலை நிகழ்வுகளுக்காக அறவிடப்படும் கட்டணங்களை அரசாங்கம் நிறுத்த வேண்டும்.

ஆகவே, அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டிற்கு நிரந்தர தீர்வை காணும் முகமாக  ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி அனைத்து ஆதிபர் ஆசிரியர்களும் கொழும்பில் இடம்பெறும் உரிமைப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தனர்.