நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைத்தால் வருடாந்தம் 30 பில்லியனை சேமிக்கலாம்

39 0

அரச நிறுவனங்களை மறுசீரமைத்தால் அரச சேவைகளை வினைத்திறனாக முன்னெடுக்கலாம்.நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைத்து,இலாபமுடையதாக்கினால் வருடாந்தம் 30 பில்லியன் ரூபாவை சேமித்துக் கொள்ளலாம் என ஜனாதிபதியின் தொழிற்சங்க விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னபிரிய தெரிவித்தார்.

நிதியமைச்சில் செவ்வாய்க்கிழமை (27) மாலை ‘புதிய அபிவிருத்தியின் பிரவேசத்துக்காக அரச நிறுவனங்கள் மறுசீரமைப்பு’என்ற தொனிப்பொருளின் கீழ் இடம்பெற்ற நிகழ்வின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நட்டத்தில் இயங்கும் புகையிரத சேவையை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்காக 2010 முதல் 2020 ஆம் ஆண்டு வரையான 10 வருட காலப்பகுதியில் மாத்திரம் அரசாங்கம் 333 பில்லியன் ரூபாவை செலவழித்துள்ளது.

நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைத்து, இலாபமடைய செய்தால் வருடாந்தம் 30 பில்லியன் ரூபாவை சேமிக்க முடியும்.சுகாதார சேவையை மறுசீரமைக்கும் நோக்கம் அரசாங்கத்துக்கு கிடையாது.பொருளாதார பாதிப்புக்கு மத்தியிலும் இலவச சுகாதார சேவையை வினைத்திறகான முறையில் முன்னெடுத்துச் செல்ல உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுகாதார தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதன்போது மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிடுகையில் இலங்கை மின்சார சபை,பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஆகியவற்றில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஊழியர்களை காட்டிலும் தற்போது 4000 தொழில்வாய்ப்புக்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன.இவ்வாறான நிலையிலும் சேவைத்துறையை வினைத்திறனான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கு தற்போதைய சேவையாளர் கட்டமைப்பு போதுமானதாக உள்ளது.

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஏற்றுக்கொள்ளப்பட்ட சேவையாளர்களின் எண்ணிக்கை 3292 ஆக காணப்படுகின்ற நிலையில் 2100 ஊழியர்கள் மாத்திரமே தற்போது சேவையில் உள்ளார்கள்.1192 பேருக்கு வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

மின்சார சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஊழியர்களின்  எண்ணிக்கை 24000 ஆக காணப்படுகிறது.அதில் 21000 பேர் மாத்திரமே தற்போது சேவையில் ஈடுபடுகிறார்கள்.3000 சேவையாளர்கள் வெளி தரப்பில் இருந்து இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.அரச சேவையில் நிலவும் வெற்றிடங்களுக்கு புதிய நியமனங்களை வழங்கி அரசியல் இலாபமடைய அரசாங்கம் தீர்மானிக்கவில்லை.

அரசியல் இலாபம் பெற்றுக்கொள்வதற்காக மாத்தறை மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு அரச தொழில்வாய்ப்புகளை என்னால் பெற்றுக் கொடுக்க முடியும்.அரசியல் நோக்கத்துடன் செயற்பட்டு அரச நிறுவனங்களை நெருக்கடிக்குள்ளாக்கும் கொள்கை அரசாங்கத்துக்கு கிடையாது என்றார்.