சனல் 4 தொலைக்காட்சியிடம் ராஜபக்ஷர்கள் நஷ்டஈடு கோர வேண்டும் – எஸ்.எம்.சந்திரசேன

60 0

சனல் 4 வெளியிட்ட ஆவணப்படத்தால் ராஜபக்ஷர்களின் கௌரவத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே சனல் 4 தொலைக்காட்சியிடம் ராஜபக்ஷர்கள் நட்டஈடு கோர வேண்டும் என்பதை வலியுறுத்தவுள்ளோம்.

மக்களை கொன்று ஆட்சிக்கு வர வேண்டிய தேவை ராஜபக்ஷர்களுக்கு இல்லை என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் புதன்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில்  சனல் 4 தொலைக்காட்சி சேவை வெளியிட்ட ஆவணப்படத்துக்கு எதிர்க்கட்சியினர் அதிக முக்கியத்துவம்  வழங்கினார்கள். குண்டுத்தாக்குதலின் பின்னணியில் ராஜபக்ஷர்கள் உள்ளார்கள்.

பொதுஜன பெரமுனவின் தேர்தல் வெற்றிக்காக குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் பாரதூரமான குற்றச்சாட்டை முன்வைத்தார்கள்.

அரச பாதுகாப்பு பிரதானி சுரேஷ் சலேவுக்கும் பயங்கரவாதி சஹ்ரானுக்கும் இடையில் எவ்வித சந்திப்பும் இடம்பெறவில்லை என்று சனல் 4 தொலைக்காட்சி சேவையின் முக்கிய தரப்பினர் தற்போது குறிப்பிட்டுள்ளார்கள்.

இதுவே உண்மை.ராஜபக்ஷர்களினால் தான் நாட்டு மக்கள் இன்று சுதந்திரமாக வாழ்கிறார்கள். மக்களை கொன்று ஆட்சிக்கு வரும் கொள்கை ராஜபக்ஷர்களுக்கு இல்லை என்பதை அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

சனல் 4 தொலைக்காட்சி சேவை வெளிப்படுத்திய ஆவணப்படுத்தால் ராஜபக்ஷர்களின் கௌரவத்துக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே இதற்காக ராஜபக்ஷர்கள் சனல் 4 விடம் நட்டஈடு கோர வேண்டும் என்பதை கட்சி என்ற அடிப்படையில் வலியுறுத்துவோம்.

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் கடனா உட்பட நாடுகள் தலையிடுவது ஒன்றும் புதிய விடயமல்ல, வழமையானதே. எந்த நாட்டையும் பகைத்துக் கொள்ள வேண்டிய நோக்கம் இலங்கைக்கு இல்லை. நாட்டின் இறையாண்மையை பாதுகாத்துக் கொண்டு சகல நாடுகளுடன் இணக்கமாக செயற்படுவது அத்தியாயசியமானது என்றார்.