உரிமைக்காக போராடிய தமிழர்களை சிறையிலடைத்தது சிங்கள பேரினவாதம்

75 0

பயங்கரவாதம் என்ற போர்வைக்குள் உரிமைக்காக போராடிய தமிழர்களை அடக்கியும் கொன்றும் வலிந்து காணாமல் ஆக்கியும் ஆண்டுக் கணக்காக அப்பாவிகளை சிறைகளில் அடைத்தும் வேடிக்கை பார்த்தது சிங்கள பேரினவாத அரச பயங்கரவாதம் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் நேற்று முன்தினம்(22.09.2023) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் அவர் கூறுகையில், 2009 வரை தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அடக்கிய பயங்கரவாத தடைச்சட்டம் 44 ஆண்டுகளை கடக்கும் நேரத்தில் அதன் வடிவத்தை சர்வதேச அழுத்தங்களின் பிரகாரம் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்ற பெயரில் எதிர்ப்புக்கள் மத்தியில் மீண்டும் செப்டம்பர் 15 வர்த்தமானியில் பிரசுரமாகியுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் உள்ளடக்கம் நாட்டில் உள்ள அனைத்து இன மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்த இருந்தாலும் உத்தேச பயங்கவாத எதிர்ப்புச் சட்டம் நிறைவேறினால் பெரியளவில் தமிழர்களே பாதிப்பைச் சந்திக்கவுள்ளனர்.

விடுதலைப் போராட்டம் சார்பான நினைவேந்தல்கள் மற்றும் தமிழர்களின் இருப்பை அரச இயந்திரம் அபகரிக்கும் போது அரசாங்கத்தற்கு எதிராக போராடும் மக்களின் ஜனநாயக போராட்டங்கள் புதிய சட்டத்தில் பயங்கரவாதமாக பார்கப்படுகின்றது.

 

அத்துடன் இதற்கான தண்டனைகளும் மிக கடினமானதாக அமைந்துள்ளன.

 

இவ்வாறான நிலை எதிர்காலத்தில் ஜனநாயகப் போராட்டங்களை முற்றாக அடக்கும் செயற்பாடாகவே அமையும் அத்துடன் சமூக ஊடகங்கள் பாரிய அளவில் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட உள்ளது.

இந்த நிலை ஏற்பட்டால் அரச அடக்குமுறைகள் உடனுக்குடன் முழுமையாக வெளிவராது தடுக்கப்படும்.

மொத்தத்தில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் நிறைவேறினால் தமிழர்களுக்கு மீண்டு ஒரு இனவழிப்புக்கு வழி திறக்கும் தடுத்து நிறுத்த ஒன்றிணைவோம் – என குறிப்பிட்டுள்ளார்.