உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளை இனங்காண ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார்

70 0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் உண்மையான சூத்திரதாரிகளை அறிந்துகொள்வதற்கு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகைக்கு இருக்கும் அதேதேவை ரணில் விக்ரமசிங்கவுக்கும் இருக்கிறது. அதனால் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகளை இனம் கண்டுகொள்ள ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது என முன்னாள் அமைச்சர் அசல ஜாகொட தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் ஞாயிற்றுக்கிழமை (17) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

உயிரத்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்து வருகினறார்.

தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகளை கண்டறியவே அவர் இந்த கோரிக்கையை முன்வைக்கிறார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகளை கண்டறியும் தேவைப்பாடு எமக்கும் இருக்கிறது. குறிப்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இருக்கிறது. ஏனெனில் தாக்குதல் இடம்பெறும்போது நாட்டின் பிரதமராக இருந்தவர் ரணில் விக்ரமசிங்க. அதனால் இந்த தாக்குதல் தாெடர்பாக தேடிப்பார்த்து சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க அவருக்கும் மிகவும் தேவைப்பாடு இருக்கிறது.

மேலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் வெளிநாட்டு பிரஜைகளும் உயிரிழந்திருந்தனர். அதனால் இதுவரை இந்த சம்பவம் தொடர்பாக 3 சர்வதேச விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.

அதேபோன்று எமது நாட்டிலும் விசாரணைகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் தற்போது சனல்4 அலைவரிசை இந்த தாக்குதல் தொடர்பாக சில புதிய தகவல்களை வெளியிட்டிருக்கின்றன.

அதனால் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என பலரும் தெரிவித்து வந்துள்ள நிலையில் ஜனாதிபதி விசாரணைக்குழுவொன்றை  அமைத்திருக்கிறது. அதேநேரம் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றும் இந்த வாரத்த்துக்குள் அமைக்கப்படும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக கிறிஸ்தவ மக்கள் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். பலர் ஊனமுற்று இருக்கின்றனர். அதேநேரம் இந்த தாக்குதலைத் தொடர்ந்து முஸ்லிம் சமூகம் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுவந்தது. அவர்களுக்கு நிம்மதியாக வாழ முடியாத நிலை ஏற்பட்டது. சமூகம் என்ற ரீதியில் அவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிட்டனர். அதேபோன்று அப்போது ஆளும் கட்சி என்ற வகையில் ஐக்கிய தேசிய கட்சி பாரிய சரிவுக்கு ஆளாகியது. தேர்தல் தோல்விக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதலே காரணமாகும்.

அதனால் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பல்வேறு தரப்பினருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்படுகின்றன. இது உண்மையாகவும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். எவ்வாறானாலும் இது தொடர்பாக முறையான விசாரணை மேற்கொண்டு உண்மையான சூத்திரதாரிகளை கண்டறிய ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.