ஹரக் கட்டா என்ற சந்தேக நபரை நீதிமன்றத்திற்கு அறிவிக்காமல் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து அழைத்துச் செல்லவோ அல்லது இடம் மாற்றவோ வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம், குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று (15) உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளான நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சமத் மொராயஸ் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம், நந்துன் சிந்தக விக்ரமரத்ன என்ற ‘ஹரக் கட்டா’ தாக்கல் செய்த மனு விசாரணை தொடர்பிலேயே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை குறித்த உத்தரவு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மனு மீதான விசாரணை செப்டம்பர் 25 ஆம் திகதி இடம்பெறும்.
தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவை மேலும் நீடிப்பதை தடுக்க உத்தரவிடுமாறு கோரி ‘ஹரக் கட்டா’ தனது சட்டத்தரணிகள் ஊடாக இந்த மனுவை சமர்ப்பித்துள்ளார்.

