இத்தாலிக்கு தப்பிச்செல்ல முயன்ற நீர்கொழும்பு இளைஞன் கைது

128 0

போலி போலந்து வதிவிட விசாவைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் இத்தாலி நாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்ற இளைஞர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (08) கைதுசெய்துள்ளனர்.

நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் தனது பயண அனுமதிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சமர்ப்பித்த ஆவணங்கள் தொடர்பில் சந்கேகமடைந்த அதிகாரிகள் அவரை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில், குறித்த நபரின் கடவுச்சீட்டை பரிசோதித்த அதிகாரிகள் வீசா போலியாக தயாரிக்கப்பட்டமை உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து இளைஞனிடம் மேற்கொண்ட விசாரணையில் தரகர் ஒருவரிடம் 40 இலட்சம் ரூபா கொடுத்து போலியான வீசா தயாரிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞனின் பயணப் பையில் இருந்து இரண்டு போலி குடிவரவு முத்திரைகள் பொறிக்கப்பட்ட மற்றொரு கடவுச்சீட்டு, இலங்கை குடிவரவு முத்திரை மற்றும் போலி விமான பயணச்சசீட்டு ஆகியவை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட இளைஞனை மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்.