பி.எம்.டபுள்யூ-வின் அதிநவீன தானியங்கி கார்: விரைவில் அறிமுகம்

391 0

ஜெர்மன் நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபுள்யூ அதிநவீன தானியங்கி கார் ஒன்றை வெளியிடுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகில் தானியங்கி கார்களை தயாரிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்களும் புதிய ஒப்பந்தங்களின் மூலம் இணைந்து தானியங்கி கார்களை உருவாக்க பணியாற்றி வருகின்றன. அந்த வகையில் பி.எம்.டபுள்யூ. நிறுவனமும் தானியங்கி கார்களை தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மற்ற நிறுவனங்களை போன்று இல்லாமல் பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் தானியங்கி கார் லெவல் 5 தானியங்கி முறைகளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மனிதர்களை போன்று எவ்வித சூழ்நிலையிலும் சாதூர்யமாக முடிவுகளை எடுத்து தானாகவே இயங்கும் படி லெவல் 5 தானியங்கி முறை இருக்கும்.
லெவல் 5 தானியங்கி முறைகள், சிறிதளவும் ஓட்டுநரின் ஒத்துழைப்பு இன்றி சாலைகளில் சாதூர்யமாக செல்லும். இந்நிலையில் தற்சமயம் சோதனை செய்யப்பட்டு வரும் தானியங்கி கார்களில் லெவல் 2 அல்லது லெவல் 3 என்ற தானியங்கி முறைகள் மட்டுமே வழங்கப்படுகிறது.
லெவல் 2 மற்றும் லெவல் 3 தானியங்கி முறைகளில் ஓட்டுநரின் கவனம் நிச்சயம் தேவை என்பதால் அனைத்து வித சாலைகளிலும் தானியங்கி முறையில் செல்லாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதிய தானியங்கி கார்களை தயாரிக்க பி.எம்.டபுள்யூ நிறுவனம் மற்றும் இஸ்ரேலை சேர்ந்த தானியங்கி தொழில்நுட்பங்களை உருவாக்கும் மொபைல்ஐ நிறுவனங்களுடன் சமீபத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது.