பணிப்பெண் ராஜகுமாரி உயிரிழந்த விவகாரம் : மேலும் மூவருக்கு விளக்கமறியல்!

185 0

தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பாளர் ஒருவரின் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரிந்த ஆர்.ராஜகுமாரி வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதன் பின்னர், உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் மற்றும் ஒரு கான்ஸ்டபிளை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனுவலவின் முன்னால் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், சந்தேக நபர்களை அடையாள அணிவகுப்பில்  ஆஜர்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தனது வீட்டில் பணிபுரிந்த போது தங்க நகையை திருடியதாக தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பாளர் சுதர்மா நெத்திகுமார வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் செய்திருந்த முறைப்பாட்டுக்கு அமைய கடந்த மே மாதம் 11ஆம் திகதி பதுளை, தெமோதர பகுதியைச் சேர்ந்த  42 வயதான ஆர்.ராஜகுமாரி வெலிக்கடை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட தினத்தன்று இரவு ஆர்.ராஜகுமாரி வெலிக்கடை பொலிஸாரினால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.

இந்நிலையில், உயிரிழந்த பெண்ணின் கணவர் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்து தனது மனைவியின் மரணம் தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்தமைக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அதற்கமைவாக ராஜன் ராஜகுமாரி கூர்மையற்ற ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளமை பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டிருந்தது.

இச்சம்பவம் தொடர்பான விசாரணையில் தெரியவந்த விடயங்களின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மெரில் ரஞ்சன் லமாஹேவா உள்ளிட்ட அதிகாரிகள்  நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள் மூவரையும் கண்டால் அடையாளம் காண முடியும் என பல சாட்சிகள் கூறியுள்ள நிலையில் அவர்களை அடையாள அணிவகுப்புக்கு அழைத்துச் செல்ல உத்தரவிடுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

எவ்வாறாயினும் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களை பரிசீலித்த நீதவான் குறித்த மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன் அவர்களை அடையாள அணிவகுப்புக்கு ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டார்.

முன்னதாக குறித்த பெண் உயிரிழந்த தினத்தன்று கைது செய்யப்பட்ட உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் வெலிக்கடை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவின்பதில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றியுள்ளார். இந்நிலையில் அவர் கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து சந்தேக நபருக்கு எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.