வரட்சியான காலநிலையால் 51,035 ஏக்கர் நெற் பயிர்ச்செய்கை 10 ஆயிரம் ஏக்கர் மரக்கறி உட்பட ஏனைய பயிர்ச்செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஒரு ஏக்கர் விவசாய நிலத்துக்கு 40 ஆயிரம் ரூபா, 1 ஹெக்டர் விவசாய நிலத்துக்கு 1 இலட்சம் என்ற அடிப்படையில் நட்டஈடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை இராஜாங்க அமைச்சர் டி.பி ஹேரத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (24) வாய்மூல விடைக்கான வினாக்களின் போது வரட்சியான காலநிலையால் சிறுபோக பயிர்ச்செய்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு, விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நட்டஈடு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்பில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலையால் 51,035 ஏக்கர் நெற் பயிர்ச்செய்கைகளுக்கும்,10 ஆயிரம் ஏக்கர் மரகறி உட்பட ஏனைய பயிர்ச்செய்கைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
( புதன்கிழமை மதிப்பாய்வுக்கு அமைய) நெல், மிளகாய், சோளம், உருளைக்கிழங்கு மற்றும் சோயா ஆகிய பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு நட்ட ஈடு வழங்க மதிப்பாய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய ஒரு ஏக்கர் விவசாய நிலங்களுக்கு 40 ஆயிரம் ரூபா, 1 ஹெக்டயர் விவசாய நிலங்களுக்கு 1 இலட்சம் ரூபா என்ற அடிப்படையில் நட்டஈடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களின் விவசாய நிலங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து இதுவரை மதிப்பாய்வு தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.
வரட்சியான காலநிலையால் குருநாகல் மாவட்டத்தில் 15,305 ஏக்கர் விவசாய நிலம், மஹவ விவசாய வலயத்தில் 9,295 ஏக்கர் விவசாய நிலம், உடவளவ விவசாய வலயத்தில் 14,667 ஏக்கர் விவசாய நிலம், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 1,892 ஏக்கர் விவசாய நிலம், புத்தளம் மாவட்டத்தில் 1,230 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளன என்றார்.

