ஜெயலலிதாவின் குடும்பத்தையே நாசம் செய்தவர் என்னிடம் இருந்து கணவர் மாதவனை பிரிக்க சதி

218 0

ஜெயலலிதாவின் சொந்த குடும்பத்தையே சதி செய்து பிரித்த சசிகலா, தற்போது தனது கணவரையும் பிரிக்க சதி செய்வதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா பரபரப்பு குற்றம்சாட்டி உள்ளார்.இதுகுறித்து, தீபா நேற்று வெளியிட்ட அறிக்கை:எனக்கு வந்த மிரட்டலுக்கு அஞ்சாமல் துணிச்சலாக செயல்பட்டு வந்தேன்.

இறுதியாக இன்று என் கணவர் மாதவனை தூண்டிவிட்டு தவறாக வழிநடத்தி தனிக்கட்சி ஆரம்பிக்க வைத்துள்ளார்கள். எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையை அழித்து விட வேண்டும் என சசிகலா குடும்பம் எனக்கு தொடர்ந்து பல இன்னல்களை அளித்து வந்தார்கள். அதையெல்லாம் கடந்து என்னுடைய அரசியல் பயணத்தை தொடர்ந்தால் என்னுடைய குடும்பத்தை பிரித்துவிட வேண்டும் என்ற கொடிய செயலில் ஈடுபட்டு என் கணவரையே எனக்கு போட்டியாக ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும்படி கட்டாயப்படுத்தி இருக்கிறார்கள். இதற்கு முன்னதாகவே, எனது சகோதரர் தீபக்கையும் விலைக்கு வாங்கி எனக்கு எதிராக செயல்பட வைத்தார்கள். என் குடும்பத்தை பிரித்து என்னை தனிமைப்படுத்தினால் நான் அரசியலில் போட்டியிடுவது சிரமமாகும் என்பது சசிகலா மற்றும் டிடிவி.தினகரனின் தவறான வியூகம்.

சொந்த குடும்பத்தை ஆரம்ப காலத்திலிருந்தே சதி செய்து பிரித்து குளிர் காயும் சசிகலா தொடர்ந்து இதேபோல பல ஆண்டுகளாக எனது தந்தையும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொந்த அண்ணனுமான ஜெயக்குமாரை பிரித்து வைத்தார். எங்கள் குடும்பத்தை போயஸ் இல்லத்திலிருந்து வெளியேற்றினார். பின்னர் எனது ஒரே சகோதரரான தீபக்கையும் கையில் எடுத்துக்கொண்டு அவரையும் என்னையும் பிரித்தார்.

இப்போது எனது கணவரை வைத்து குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்று பின்னால் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றனர். யாருடைய மிரட்டலுக்கும், அச்சுறுத்தலுக்கும் அஞ்சாமல் அயராது என்னுடைய அரசியல் பயணத்தை தொடர்வேன். எனக்கு எதிரான சதி திட்டதிற்கெல்லாம் ஆர்.கே. நகர் தொகுதி வாக்காளர்கள் நல்ல தீர்ப்பினை வழங்குவார்கள் என்று நம்புகிறேன்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.