இந்தியாவின் அத்திப்பட்டி போன்று காணாமல் போன கிராமமாக இலங்கையில் அம்பாறை மாவட்டத்தின் வயலூர் கிராமம் அமைந்துள்ளது என குறிப்பிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் தவராசா கலையரசன் வயலூர் கிராமத்தில் 1985 ஆம் ஆண்டில் கொல்லப்பட்டவர்களுக்காக சபையில் அஞ்சலி செலுத்துவதாகவும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (23) இடம்பெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
ஏற்றுமதி இறக்குமதி தொடர்பாகவும் வெளிநாட்டு கடன்கள் தொடர்பாக மாத்திரம் பேசப்படுகின்றது. இலங்கை வளமான எழில் மிக்க நாடாகும்.
ஆனால் இன்று பொருத்தமான நிகழ்ச்சி நிரல் இன்றி வெளிநாட்டவர்களிடம் கையேந்தும் நிலையிலேயே நாடு இருக்கின்றது.
எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் தங்களின் அரசியல் அதிகாரங்களை முன்னிருத்தி அவர்களுக்கு தேவையான வேலைகளையே செய்தார்களே தவிர மக்களுக்காக எதனையும் செய்யவில்லை என்பது தற்போதைய பொருளாதார பின்னடைவு எடுத்துக் காட்டுகின்றது.
எவ்வாறாயினும் இனவாதம் மற்றும் மதவாத சிந்தனை கொண்ட அரசாட்சி இந்த வீழ்ச்சிக்கு காரணமாகும். இந்த நாட்டு மக்களை தெளிவான சிந்தனையோடு ஆட்சியாளர்கள் அனுகவில்லை.
இந்நிலையில் அம்பாறை மாவட்டத்தில் தமிழர் போராட்டம் முதன் முதலில் இடம்பெற்றஇ இந்தியாவில் அத்திப்பட்டி கிராமம் போன்று அழிக்கப்பட்டு காணாமல் போன கிராமமாக திருக்கோவில் பிரதேசத்தில் வயலூர் கிராமம் அமைந்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில் பல தமிழ் கிராமங்கள் சிங்க ஆட்சியாளர்களால் அழிக்கப்பட்டு தமிழ் மக்கள் வாழ்ந்த இடமே இல்லாமல் போன கிராமமாக வயலூர் கிராமம் காணப்படுகிறது.
1985 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி யுத்த நிறுத்த சமாதன திம்பு பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் அப்பாவி விவசாயிகள் கொல்லப்பட்டு அழிக்கப்பட்ட கிராமமாக வயலூர் கிராமம் காணப்படுகிறது.
இந்த நாட்டில் இன ரீதியிலான அடக்குமுறை இனியும் தொடரக் கூடாது. வயலூர் கிராமத்தில் கொல்லப்பட்ட மக்களுக்காக நான் இந்த சபையில் அஞ்சலியை செலுத்திக்கொள்கின்றேன் என்றார்.

