நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கான பரந்துபட்ட கூட்டணி எதிர்வரும் ஓரிரு மாதங்களுக்குள் அமைக்கப்படும்.
இதற்கான முதற்கட்ட பயணம் செப்டெம்பர் 16, 17ஆம் திகதிகளில் மாத்தறையில் ஆரம்பமாகவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் செவ்வாய்கிழமை (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
பணவீக்கம் வீழ்ச்சியடைந்துள்ளதாக பெருமையாகப் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் மக்களுக்கு 3 வேளை உண்ண முடியாத சூழலை ஏற்படுத்தியே பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
முளைசாலிகளின் வெளியேற்றம் நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்வி, சுகாதாரம், வங்கி உள்ளிட்ட சகல துறைகளிலும் இது தாக்கம் செலுத்தியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதைத் தவிர தற்போதைய அரசாங்கம் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு எவ்வித வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை. வரட்சியால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை ஈடுசெய்வதற்கான வேலைத்திட்டங்களும் அரசாங்கத்திடம் இல்லை.
விவசாயத்துக்கான நீரையும், குடிநீரையும் வழங்குவதற்கு அரசாங்கத்திடமுள்ள வேலைத்திட்டம் என்ன? தேர்தலுக்கான வேலைத்திட்டங்கள் மாத்திரமின்றி நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்களையும் அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.
அரசாங்கத்தில் பொதுஜன பெரமுனவினரும், ரணில் தரப்பும் பிளடைந்துள்ளது. அரசாங்கத்தின் உள்ளக முரண்பாடுகள் நாளுக்கு நாள் விரிவடைந்து செல்கின்றன.
நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதற்காகவே தேர்தல் வேண்டுமென்று நாம் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம். எதிர்வரும் ஓரிரு மாதங்களுக்குள் நாம் பரந்துபட்ட கூட்டணியை அமைப்போம்.
செப்டெம்பரில் 16, 17ஆம் திகதிகளில் கட்சியை பலப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம். மாத்தறையில் இதற்கான பயணம் ஆரம்பிக்கப்படும் என்றார்.

