சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பல் விடுவிப்பு..

286 0

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டிருந்த கப்பலும், அதில் இருந்த எட்டு இலங்கை பணியாளர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொள்ளையர்கள் இவர்களை கப்பம் இன்றி விடுவித்துள்ளனர்.
குறித்த கப்பலின் தலைவரான தமிழரான நிக்கலஸ் அந்தோனி இந்த செய்தியை உறுப்படுத்தியுள்ளார்.

குறித்த கப்பல் ஒலூலா நகர கடற்பரப்புக்கு அருகில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அதனை மீட்க சோமாலிய படையினர் தாக்குதல்களை நடத்தினர்.

இந்த மோதலின் போது ஹபோ நகரில் இரண்டு பேர் காயமடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் தாக்குதல்களை நிறுத்துமாறு கப்பல் தலைவரால் அறிவுறுத்தப்பட்டது.

பின்னர் படையினருக்கும், சோமாலிய கடற்கொள்ளையர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதனை அடுத்து எந்த நிபந்தனைகளும் இல்லாமல் கடற்கொள்ளையர்கள் கப்பலையும், எட்டு இலங்கை பணியாளர்களும் விடுவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கொள்ளையர்கள் அற்ற சமுத்திரம் என்ற சர்வதேச அமைப்பின் பிராந்திய முகாமையாளர் ஜோன் ஸ்ரீட், வாழ்வா சாவா என்ற அடிப்படையில் சோமாலிய படையினரால் கடற்கொள்ளையர்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பினாலேயே அவர்கள் விடுவிக்கப்பட்டதாக கூறினார்.

அத்துடன் கப்பலைக் கடத்திய கடற்கொள்ளையர்களுக்கு சோமாலிய அரசாங்கத்தினால் மன்னிப்பு வழங்கவும் இணங்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.