கடத்தப்பட்ட கப்பலை விடுவிக்க துப்பாக்கிப் பிரயோகம்

204 0

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலை விடுவிக்க முன்னெடுக்கப்படும் முயற்சியின்போது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சர்வதேச ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.

கடத்தப்பட்ட கப்பலை மீட்கும் பணியில் சோமாலிய பாதுகாப்பு தரப்பினர் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, கடத்தப்பட்ட கப்பலில் உள்ள கொள்ளையர்களுக்கு உதவி வழங்கிய மற்றுமொறு கப்பலை நிறுத்த முயற்சிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த கப்பலில் இருந்த கொள்ளையர்கள், பாதுகாப்பு தரப்பினர் பயணித்த கப்பல் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

பின்னர், குறித்த கொள்ளையர்கள் மீது பாதுகாப்புத் தரப்பினர் பதில் தாக்குதல் நடத்தியபோதும், அந்த கப்பல் தப்பிச்சென்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, இலங்கையர்கள் எட்டு பேருடன் கடத்தப்பட்ட மசகு எண்ணெய் கப்பலை விடுவிப்பதற்காக கொள்ளையர்கள் கப்பம் கோரும் பட்சத்தில் அதனை வழங்க கப்பல் நிறுவன உரிமையாளர் இணக்கப்பாட்டை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கப்பல் நிறுவனத்திற்கு சேவையாளர்களை அனுப்பும் இலங்கை பிரதிநிதியான டிரோன் பெர்ணாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.

கொள்ளையாளர்கள் இதுவரை கப்ப பணத்தொகை ஒன்றை கோரியுள்ளமையை உறுதிப்படுத்த முடியாதுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.