பியர் மற்றும் கால்நடை உற்பத்திக்கு அரிசியைப் பயன்படுத்த வேண்டாம்

43 0

பியர் உற்பத்தி மற்றும் கால்நடை தீவனத்துக்காக அரிசியை பயன்படுத்துவதை இடைநிறுத்துமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, விவசாய அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான எழுத்து மூல ஆவணத்தை வர்த்தக மற்றும் நுகர்வோர் அலுவல்கள் அமைச்சின் செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் உணவு பாதுகாப்பு குழுவிடம் சமர்ப்பிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நெற்பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.

எதிர்வரும் நாட்களில் கணிசமான மழைவீழ்ச்சி இல்லாமல் போனால்,  எதிர்வரும் பருவக் காலத்தில் எதிர்பார்த்த நெல் அறுவடையை செய்ய முடியாத நிலை உருவாகும். இதனால் நாட்டில், அரிசி தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என விவசாய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.