மடு ஆலய விழா : கடைகள், உணவுப் பண்டங்களின் தரங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்

51 0
மடு ஆலய விழாவுக்காக கடைகள் மற்றும் விற்பனை நிலையங்கள் அமைத்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் சகலரும் சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்.

அத்துடன் இவர்கள் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரமும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என மன்னார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட செயலகத்தில் மன்னார் அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில் ஆவணி மாதம் நடைபெற இருக்கும் மடு அன்னை பெருவிழாவுக்கான முன்னேற்பாடு தொடர்பான கூட்டத்திலேயே மன்னார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்.

எதிர்வரும் ஆவணி மாதம் 15 ம் திகதி வழமைபோன்று நடைபெற இருக்கும் மருதமடு அன்னையின் வருடாந்த பெருவிழாவுக்கான சுகாதார நடைமுறைகள் கடந்த காலங்களைப்போல் இம்முறையும் சிறந்த முறையில் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

மருதமடு ஆலய வளாகத்துக்குள் இருக்கும்  வைத்தியசாலையில் எமது சுகாதாரப் பிரிவினர் அங்கு நிலைகொண்டு அவசர மற்றும் சாதாரண சிகிச்சைகள் அளிப்பதற்கான முன்னெடுப்பதற்கான எற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு நோயாளர் காவுவண்டிகளும் (அம்புலன்ஸ்) மடு வைத்தியசாலையில் தரித்து நிற்கப்படும். அவசர நோளாளிகளை இங்கிருந்து அனுப்பப்பட வேண்டிய வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்துடன் மடு ஆலயத்தை சூழவுள்ள பகுதிகளில் டெங்கு நோயை பரப்பக்கூடிய நுளம்புகள் உள்ளனவா என்பதின் பரிசோதனை எமது பூச்சியல் பிரிவினரால் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு டெங்கு நுளம்பு இனம் காணப்பட்டால் புகையூட்டல் இடம்பெறும். அத்தோடு அப்பகுதிகளில் கடைகள் மற்றும் விற்பனை நிலையங்கள் அமைத்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் சகலரும் சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்.

இவ்வாறான நடவடிக்கைகளில் பொது சுகாதார பரிசோதகர்கள் கடமையில் ஈடுபடுவர். அத்துடன் இவர்கள் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரமும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்.

பொது சுகாதர பரிசோதகர்கள் மற்றும் பயிற்சி நெறியில் ஈடுபடும் சுகாதார பகுதினர் கொண்ட அணியினர் இதில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றனர்.

இதைவிட இங்குவரும் மக்களின் தொகைக்கு எற்ப போதியளவு சுகாதார அணியினரை சேவையில் ஈடுபடுத்தவும் நாம் திட்டமிட்டுள்ளோம் என மன்னார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் இவ்வாறு தெரிவித்தார்.