மட்டக்களப்பில் சந்தைப்படுத்தும் சபை ஊடாக நெல் கொள்வனவினை அரசாங்கம் ஆரம்பித்துள்ள நிலையில் அனைத்து வகையான நெல்லையும் கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுபோக அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில் நேற்றைய தினம் (24.07.2023) இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் நேற்று நெல் கொள்வனவு ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 80ஆயிரம் ஏக்கருக்கு அதிகமான வயல்களில் செய்கை முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் அதன் அறுவடைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுமுன்னெடுக்கப்படுகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நெல் கொள்வனவு மேற்கொள்ளப்படாத நிலையில் மட்டக்களப்பு மாவட்ட கமக்காரர் அமைப்புகளின் அதிகாரசபை மற்றும் விவசாய அமைப்புகள் தொடர்ச்சியாக குரல்கொடுத்து வந்தனர்.
இந்த நிலையில் நெல் கொள்வனவு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்காக 50மில்லியன் ரூபாவினை அரசாங்கம் ஒதுக்கீடுசெய்துள்ளது.
பட்டிப்பளையில் உள்ள நெல் சந்தைப்படுத்தும் சபையின் களஞ்சியசாலையில் விவசாயிகளின் பங்களிப்புடன் ஒரு கிலோ 95வீதம் நெல் கொள்வனவு ஆரம்பித்துவைக்கப்பட்டது.
பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் விவசாயிகள் நெல் உற்பத்தியில் ஈடுபட்டுவரும் நிலையில் அனைத்து இன நெல்லையும் அனைத்து விவசாயிகளது நெல்லையும் கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

