தேசிய பொருளாதாரம், சட்டம் மற்றும் ஒழுங்கு- பாதுகாப்பதற்காகவே ரணிலை தெரிவு செய்தோம்!

145 0

தேசிய பொருளாதாரம், சட்டம் மற்றும் ஒழுங்கு ஆகியவற்றை பாதுகாப்பதற்காகவே ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம்.

இவ்விரு விடயங்களையும் விடுத்து அவர் செயற்பட்டால் கட்சி என்ற ரீதியில் ஒரு தீர்மானத்தை எடுப்போம் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஆனமடுவ பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (23) இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்தாவது,

30 வருட கால யுத்தத்தை குறுகிய காலத்துக்குள் முடிவுக்கு கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி நாட்டை சிறந்த முறையில் அபிவிருத்தி செய்தார்.

ராஜபக்ஷர்கள் மீது போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது. இதன் பிரதிபலனாகவே 2015 ஆம் ஆண்டு ஆட்சிமாற்றம் ஏற்பட்டது.

நல்லாட்சி அரசாங்கம் தேசிய பொருளாதாரத்தை முழுமையாக இல்லாதொழித்தது. ராஜபக்ஷர்கள் மீது சுமத்தப்பட்ட எந்த குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்படவில்லை. இவ்வாறான பின்னணியில் தான் 2019 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

பாரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் மக்கள் கோட்டபய ராஜபக்ஷ தலைமையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான எமது அரசாங்கம் பலவீனமடைவதற்கு அமைச்சரவையில் இருந்த ஒருசிலர் பாரிய ஒத்துழைப்பு வழங்கினார்கள்.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அரகலய என்று மக்கள் போராட்டத்தை தோற்றுவிக்கும் சூழலை பொதுஜன பெரமுனவினர் ஏற்படுத்திக் கொடுத்தனர்.

இறுதியில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டு அது ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அவர்கள் முன்னின்று செயற்பட்டார்கள்.

கோட்டபாய  ராஜபக்ஷ ஆட்சியில் இருந்த போது எரிபொருள் எரிவாயு ஆகியவற்றுக்காக நீண்ட வரிசை,பல மணித்தியாலங்கள் மின்விநியோக தடை பிரச்சினைகள் அனைத்தும் அவர் பதவி விலகியவுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டன.

தேசிய பாதுகாப்பு, நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கு ஆகியவற்றை பாதுகாப்பதற்காகவே ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம்.

இவ்விரு விடயங்களையும் விடுத்து அவர் செயற்பட்டால் கட்சி மட்டத்தில் உறுதியான தீர்மானம் ஒன்றை எடுப்போம் என்றார்.