இலங்கைக்கு கால நீடிப்பு வழங்கப்படக் கூடாது – வைகோ

222 0

இலங்கைக்கு தொடர்ந்தும் கால நீடிப்பு வழங்கக் கூடாது என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளருக்கு, வைகோ கடிதம் அனுப்பியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவின் 34வது அமர்வு தற்போது ஜெனிவாவில் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் மனித உரிமைகள் ஆணையாளர் ரவுத் அல் உசேனுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மின்னஞ்சல் மூலம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அதில், “மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட ஓர் அரசியல் கட்சியாகும். ஈழத் தமிழர்கள் சார்பிலும், உலகத் தமிழர்கள் சார்பிலும் நீதி கேட்டு இக்கோரிக்கை மனுவினை அனுப்புகிறேன்.

2015 மார்ச் 2 முதல் 27 வரை ஜெனிவாவில் நடைபெற்ற 28வது ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மான எண் 30/1 இன்படி இலங்கை அரசு அப்பொழுது ஒப்புக்கொண்டபடி எதனையும் நிறைவேற்றாமல் நிராகரித்த நிலையில், இதுகுறித்து இலங்கை அரசுக்கு எந்தவித நீட்டியும் தரக்கூடாது என வேண்டுகிறோம்.

2015 இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுவதுமாகச் செயல்படுத்துவதாக இலங்கை அரசு வாக்குறுதி அளிக்கும் விதத்தில் தானும் முன் மொழிந்தது. போதுமான கால அவகாசமும், நீட்டிப்பும் கொடுக்கப்பட்டும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்ட எந்தச் செயலையும் இலங்கை அரசு முன்னெடுக்கவில்லை.

இனப்படுகொலைக்கு ஆளான ஈழத் தமிழர்களுக்கு பாதுகாப்பும், நீதியும் ஐ.நா.வின் மனித உரிமைக் கவுன்சில் செய்ய வேண்டிய கடமையை நிறைவேற்ற, இலங்கைப் பிரச்சினையை ஐ.நா.வின் பொதுச் சபைக்கு எடுத்துச் செல்லவும், பொதுச் சபை அதனை பாதுகாப்பு கவுன்சிலுக்கு கொண்டு செல்லவும் உரிய பரிந்துரையைச் செய்ய வேண்டும்.

அதன் மூலம் அகில உலக குற்றவியல் நீதிமன்றத்தில் இப்பிரச்சினை எடுத்துச் செல்லப்பட வேண்டும். மனிதகுலத்திற்கு எதிராக வடகொரியா நடத்திய கொலைக் குற்றத்துக்கு பொறுப்பேற்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியதைப் போல இலங்கைப் பிரச்சினையில் “அனைத்துலக குற்றவியல் தீர்ப்பாயம்” அமைக்கப்பட வேண்டும்.

இலங்கை அரசுக்கு இதற்கு மேலும் கால நீட்டிப்பு கொடுத்தால் தமிழர்களின் பாதுகாப்பு ஆபத்துக்கு ஆளாவதோடு அதிகளவில் மனித உரிமைகள் நசுக்கப்படும் அபாயமும் உள்ளது, எனக் குறிப்பிடப்பட்டுள்ளது