நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டுமென்றால் நட்புவட்டார முதலாளித்துவம் மற்றும் நட்புவட்டார அரசியல் ஒழிக்கப்பட வேண்டும், அத்துடன் ஊழல் அரசியல் கலாசார கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு 220 இலட்சம் மக்களினதும் புதிய ஆணையுடன் நாட்டுக்கு பொறுப்புக்கூறும் தூய அரசியல் கலாசார கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும். என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) இடம்பெற்ற மத்திய வங்கி சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீட்டு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஊழல் எதிர்ப்பு சட்டமுலம், பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம்,மத்திய வங்கி சட்டமூலம் போன்ற எந்த சட்டமூலங்களை அரசாங்கம் கொண்டு வந்தாலும் இறுதியில், இந்நிறுவனங்களில் பணியாற்றும் சுதந்திரமான மற்றும் பாரபட்சமற்ற அதிகாரிகள் அரசாங்கத்தின் உத்தரவுகளுக்கு கீழ்ப்படியாமல், மக்கள் பக்கம் இருந்து சிந்தித்து செயல்படும்போது சிறப்புரிமைக் குழுக்களுக்கு அவர்கள் அழைக்கப்பட்டு அச்சுறுத்தும் நடவடிக்கையே இடம்பெறும்.
இந்த சிறப்புரிமைக் குழுக்கள் தெரிவுக் குழுக்களின் ஊடாக அரசாங்க அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க முடியுமான துறும்பாென்றை கையில் வைத்துக்கொண்டே மக்களுக்கு காட்டும் வகையில் இவ்வாறான சட்டமூலங்களை கொண்டுவருகிறது. அதனால் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் உயர்ந்து காணப்படும் வரை இந்த சட்டமூலங்கள் எதுவும் பயனளிக்கப்போவதில்லை.
அத்துடன் நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டுமென்றால் நட்புவட்டார முதலாளித்துவம் மற்றும் நட்புவட்டார அரசியல் ஒழிக்கப்பட வேண்டும், ,இதன் ஊடாக இந்த ஊழல் அரசியல் கலாசார கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு 220 இலட்சம் மக்களினதும் புதிய ஆணையுடன் நாட்டுக்கு பொறுப்புக்கூறும் தூய அரசியல் கலாசார கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.
தேர்தல்களின்போது தமது பிரசார நடவடிக்கைகளுக்கு பணத்தைச் செலவழித்த நட்பு வட்டார நண்பர்களுக்கு கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான வரிச்சலுகைகள் வழங்கியதால்,சீனி மோசடிகள்,தேங்காய் எண்ணெய் மோசடிகள்,எரிவாயு மோசடிகள் மருந்துப்பொருட்கள் மோசடிகள் போன்ற மோசடிகள் நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்றன.கழிவு உரக்கப்பலில் கூட இலஞ்சம் வாங்கிய இவர்களால் 2048 இல் கூட நாட்டை மீட்க முடியாது. இதற்கு புதிய அரசியல் ஆணை தேவை.
மேலும் சர்வதேச நாணய நிதியம் முன்வைத்த நிபந்தனைகளை நடைமுறைப்படுத்தவே இவ்வாறான சட்டமூலங்கள் கொண்டுவரப்பட்டாலும்,தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திற்கு திருடர்களைப் பிடிக்கவோ,பண்டோரா பத்திர மோசடிக்காரர்களை பிடிப்பதற்கோ, நாட்டிலிருந்து கொண்டு செல்லப்பட்ட தேசிய வளங்களை நாட்டுக்குத் திரும்பப் பெறுவதற்கோ விருப்பமில்லை.
ஜனாதிபதி ரணில் ராஜபக்ஷ் அல்ல, ரணில் விக்கிரமசிங்கவே என்பதை நிரூபிக்க நாட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் வளங்களை மீண்டும் நாட்டுக்கே திருப்பி பெற்றுக்கொள்ளவும் திருடர்களை பிடிக்கவும் முடிந்தால் நடவடிக்கை எடுத்துக்காட்டுங்கள் என்றார்.

