நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருந்த இரண்டு தமிழ் அரசியல் கைதிகள் ஜனாதிபதியின் விஷேட பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் கடந்த 18/07/2023ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களை “குரல் அற்றவர்களின் குரல் ” அமைப்பினர் இன்று (20.07.2023) நேரில் சென்று அவர்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.
இது குறித்து அவர்கள் ஊடக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கிளிநொச்சி, மருதநகரைச் சேர்ந்த 69வயதுடைய செல்லையா நவரட்ணம் மற்றும் யாழ்ப்பாணம், சாவகச்சேரியை சேர்ந்த 56 வயதுடைய சண்முகரட்ணம் சண்முகராஜா ஆகியோரே இவ்வாறு பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
விடுவிக்கப்பட்ட இருவருக்கெதிராகவும் கடந்த காலத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டிருந்தது. எனினும், போர்ச்சூழல் காரணமாக ஏற்படுத்தப்பட்டிருந்த போக்குவரத்துத் தடையினால் இவர்களால் மேல்நீதிமன்றில் முன்னிலையாக முடியாதிருந்தது.
அந்தவகையில், இவர்கள் இருவரினதும் விடுதலை கூட்டுழைப்பின் பயனால் மெய்ப்பட்டுள்ளது. கைதிகளின் விடுதலையை சாத்தியப்படுத்தியுள்ள ஜனாதிபதி அவர்களது நற்செயலை குரலற்றவர்களின் குரல் அமைப்பு மனதார வரவேற்கின்றது.

