சமூக வலைதளங்களில் மதங்களை இழிவு படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை: பாக். பிரதமர் உத்தரவு

278 0

சமூக வலைதளங்களில் மதங்களை இழிவுபடுத்தி கருத்து வெளியிட்டால் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் மத நிந்தனை மற்றும் மதத்தின் புனிததன்மையை இழிவுபடுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவிப்பவர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் அந்நாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதுடன், அவர்கள் பதிவு செய்த தகவலையும் உடனடியாக நீக்க வேண்டும் என்றும் தனது உத்தரவில் கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் உள்ள இஸ்லமபாத் உயர் நீதிமன்றம் கடந்த வாரம் இது தொடர்பாக அந்நாட்டு உள்துறை மந்திரிக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில், முஸ்லீம் மதத்திற்கு எதிராக கருத்துக்களை பதிவிடுவதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதையடுத்து, பிரதமர் நவாஸ் ஷெரிப் மேற்கண்ட வழிகாட்டலை உள்துறை மந்திரி சவுத்ரி நிசார் அலி கானுக்கு பிறப்பித்துள்ளார். தனது உத்தரவில், இந்த பயங்கர குற்றங்களுக்கு பின்னணியில் இருப்பவர்கள் மீது எந்த தாமதமும் இன்றி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, சமூக வலைத்தளங்களில் மதநிந்தனை கருத்துக்கள் பதிவு செய்வதற்கு கண்டனம் தெரிவித்து பாகிஸ்தான் தேசிய சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இதுபோன்ற செயல்களை கண்காணிக்க 10 பேர் கொண்ட கமிட்டி அமைக்கவும் தேசிய சபை ஒப்புதல் அளித்துள்ளது.