இராணுவ அம்பியூலன்ஸும் வேனும் மோதி 3 மாணவர்கள் உட்பட ஆறு பேர் காயம்!

137 0
பலாங்கொடை  ஓப்பநாயக்க உடவெல பிரதேசத்தில் இராணுவத்தின் அம்பியூலன்ஸும்  வேனும் மோதி  மூன்று பாடசாலை மாணவர்கள் உட்பட ஆறு பேர் காயமடைந்துள்ளதாக பலாங்கொடை வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று வியாழக்கிழமை (20) இடம்பெற்றுள்ளது.

கொழும்பு – பதுளை பிரதான வீதியில் ஓப்பநாயக்க உடவெல பிரதேசத்தில் தியத்தலாவ இராணுவ முகாமுக்குச் சொந்தமான அம்பியூலன்ஸ் ஒன்றும் வேன் ஒன்றும் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் இராணுவ அம்பியூலன்ஸின் சாரதியும் காயமடைந்துள்ளதாகவும், வேன் சாரதியின் நிலைமை கவலைக்கிடமாக  காணப்பட்டதால்  இரத்தினபுரி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பலாங்கொட வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் ஓப்பநாயக்க பொலிஸின்  போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.