ஏழை மாணவர்களுக்கு எதுவித கட்டணமும் இன்றி பஸ் பருவகால சீட்டுக்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி வேளையில் கிங்ஸ் நெல்சன் எம்பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்,
‘சிசு செரிய’ பாடசாலை பஸ் சேவையை முன்னெடுத்துச் செல்வதற்கு வருடாந்தம் இரண்டு பில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவிடுகிறது.
எனினும் நாட்டில் நிலவும் நிதி நெருக்கடி காரணமாக அதனை முழுமையாக வழங்குவதற்கு திறைசேரியில் பணம் கிடையாது.
அதனால் சிசு செரிய பஸ் சேவையை முன்னெடுத்துச் செல்வதில் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ் துறையினருக்கும் பிரச்சினையாக உள்ளது.
அதனால் அமைச்சரவை அனுமதியுடன் அது தொடர்பில் ஆராய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக ஏழை மாணவர்களுக்கு எந்த கட்டணமும் அறவிடாமல் இலவசமாக பருவ கால சீட்டை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அவ்வாறு கொஞ்சம் பணத்தையாவது செலுத்த முடியுமானவர்களிடம் மூன்றில் ஒரு பகுதி கட்டணத்தை அறவிட்டு மேலும் இரண்டு பகுதியை நிவாரணமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

