கொரியப் பெண்ணின் பேர்ஸைத் திருடிய நபர் சிக்கினார்

240 0

கொரியப் பெண்ணின் பேர்ஸைத் திருடிய நபரைக் கண்டு பிடித்து பேர்ஸைக் கைப்பற்றியதோடு அதிலிருந்த பணமும் இன்னபிற பொருட்களையும் மீட்டு உரியவரிடம் பத்திரமாக ஒப்படைத்ததாக ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

திங்கட்கிழமை இரவு கொழும்பிலிருந்து, கல்முனை நோக்கிப் புறப்பட்ட தனியார் அதி சொகுசு பேரூந்தில் கொரிய நாட்டு யுவதிகள் மூவர் பயணித்துள்ளனர்.

குறித்த பஸ் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள செங்கலடியைக் கடக்கும்போது தனது பேர்ஸ் காணாமல் போயிருப்பதை கொரிய நாட்டு யுவதி தெரிந்து கொண்டார்.

இதுபற்றி பஸ் நடத்துநரிடம் கூறியதும் பஸ் உடனடியாக அருகிலுள்ள ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டு பொலிஸார் துரிதமாகச் செயற்பட்டு பயணிகளைச் சோதனையிட்டனர்.

இந்த வேளையில் பேர்ஸைத் திருடி தனது உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த நபரைப் பொலிஸார் கண்டு பிடித்து பேர்ஸையும் அதிலிருந்த பணம் உட்பட இன்ன பிற பொருட்களையும் மீட்டதோடு திருட்டு நபரைக் கைது செய்தனர்.

இலங்கை நாணயத்திற்கு மாற்றப்பட்ட 17220 ரூபாவும் இன்னபிற முக்கியமான பொருட்களும் மீட்கப்பட்டன.