சிறீலங்கா கடற்படையினரால் கடத்தப்பட்ட தமிழ் மாணவர்கள் 5பேர் உட்பட 11பேரும் படுகொலை

257 0

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து சிறீலங்கா கடற்படையினரால் கடத்தப்பட்ட தமிழ் மாணவர்கள் 5பேர் உட்பட 11பேரும் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு அறிவித்துள்ளது.

குறித்த வழக்கு விசாரணை நேற்று கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

சிறீலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதியாகவிருந்த வசந்த கருணாகொட, தனது பாதுகாப்பு உத்தியோகத்தராகக் கடமையாற்றிய லெப்டினண்ட் கொமாண்டர் சம்பத் முனசிங்கவிற்கு எதிராக குற்றத் தடுப்புப் பிரிவில் முறையிட்டதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போதே இவ்விடயம் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்டுள்ள கொமாண்டர் சுமித் ரணசிங்க மற்றும் முக்கிய சாட்சியாளர்களில் ஒருவரான கடற்படை தளபதி வெலதெர ஆகியோரின் சாட்சிகளுக்கமையவே குறித்த 11பேரும் படுகொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக நீதிமன்றில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.