ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர செவ்வாய்க்கிழமை (04) கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தமை தொடர்பாக ஊடக சேவை தொழிற்சங்க சம்மேளனம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதரவை குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைத்து விசாரணை மேற்கொண்டிருப்பது ஊடகங்களை அடக்கும் மற்றுமொரு நடவடிக்கையாகும். சில மாதங்களுக்கு முன்னரும் இவர் இவ்வாறு குற்றப்புலனாய்வு விசாரணை திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டிருப்பது மூன்றாவது தடவையாகும்.
அரசாங்கத்தினால் ஊடக ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை சட்டமூலம், சமூகவலைத்தள ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் போன்ற பல அடக்குமுறை சட்டமூலங்களை பிரேரித்துள்ள சந்தர்ப்பத்திலே இவ்வாறு ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அதனால் ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டதானது கருத்து தெரிவிக்கும் அடிப்படை உரிமைக்கு எதிரான செயலாகவே காண்கிறோம்.
ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர கடந்த மே மாதம் 29ஆம் திகதி மருதானை சமூக கேந்திர நிலையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின்போது தெரிவித்திருந்த விடயங்கள் தொடர்பாக வாக்கு மூலம் பெற்றுக்கொள்ளவே இவ்வாறு அழைக்கப்பட்டிருந்தார். அதன் பிரகாரம் நேற்றைய தினம் காலை 10,30 மணிக்கு அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

