யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் மணல் யாட் அமைத்து சட்டவிரோத மணல் கொள்ளை மேற்கொள்ளப்படுவதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடம்பெறுவதாகவும், அதனை பொலிஸார் கண்டுகொள்வதில்லை என்றும் யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வைத்து மக்கள் குற்றச்சாட்டினை முன்வைத்த போதே நாடாளுமன்ற உறுப்பினர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனையடுத்து சுமந்திரன் தெரிவிக்கையில், குடாரப்பு பகுதியில் இராணுவத்தில் பணியாற்றிய ஒருவர் யாட் அமைத்து சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டு வருகின்றார்.
குறித்த நபர் இராணுவத்தில் பணியாற்றியவர். இதனால் மக்கள் அவர் குறித்த தகவல்களை வழங்க அச்சப்படுகின்றனர் என கூறியுள்ளார். இதேவேளை சட்டவிரோதமான நடவடிக்கைகளை தவிர்ப்பதற்கு மருதங்கேணி, நாகர்கோவில், வல்லிபுரம், முள்ளிச்சந்தி ஆகிய நான்கு இடங்களிலும் பொலிஸ் மற்றும் இராணுவ காவலரண்கள் இருக்கின்ற நிலையில் இது எவ்வாறு இடம் பெறுகிறது, என கிராம மட்ட அமைப்பு பிரதிநிதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

