177 தொழிலாளர்கள் கைது: ஜி.கே.வாசன் கண்டனம்

233 0

ஆந்திரா மாநிலத்தில் 177 தமிழக கூலித்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து தங்களின் வாழ்வாதாரத்திற்காக தினக்கூலிகளாக ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், காஜோல்பேட்டை என்ற இடத்திற்கு வேலை தேடிச்சென்ற 177 அப்பாவி கூலித் தொழிலாளர்களை செம்மரம் வெட்டுவதற்காக வந்தவர்கள் என்று தவறாக கருதி பொய் வழக்கு போட்டு கைது செய்து சிறையில் அடைத்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

இதுபோன்ற பிரச்சனைகளில் தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தி நிரந்தர தீர்வு காண வேண்டும். உடனடியாக ஆந்திர அரசோடு பேசியும், சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுத்தும் ஆந்திர சிறையில் வாடும் அனைத்து தமிழக கூலித்தொழிலாளர்களையும் விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.