வன் கோல்பேஸ் கட்டடத்தொகுதியில் கலகம் விளைவித்த கலால் திணைக்கள அதிகாரிகள் கடும் நடவடிக்கை!

64 0

கொழும்பில் உள்ள வன் கோல்பேஸ் கட்டடத்தொகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில்  கைகலப்பில் ஈடுபட்டதாகக்  கூறப்படும் கலால் திணைக்கள  அதிகாரிகள்  மீது  கடும் நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக  கலால் திணைக்களம்  தெரிவித்துள்ளது.

இன்று புதன்கிழமை (07) காலை  இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த கலால் திணைக்களத்தின் பேச்சாளரும் மேலதிக ஆணையாளருமான கபில குமாரசிங்க இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,  இந்த விவகாரம் தொடர்பில் துரித விசாரணைகளை மேற்கொண்டு, அசாதாரண  நிலைமை ஏற்பட  காரணமானவர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து   அவர்களை பணி இடைநிறுத்தம் செய்யவோ  அல்லது அவர்களுக்கு  வேறு தகுந்த தண்டனை  வழங்கவோ நடவடிக்கை எடுக்கப்படும்.

15 பேர் கொண்ட இந்த   அதிகாரிகள் குழு கலால் திணைக்களத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும், சம்பவத்தின் போது அவர்கள் மதுபோதையில் இருந்ததாகவும்  அவர்  மேலும் உறுதிப்படுத்தினார்.

இதேவேளை, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.