ஜெர்மனி ரெயில் நிலையத்தில் மர்மநபர் கோடரி தாக்குதல்: 7 பேர் படுகாயம்

407 0

ஜெர்மனி ரெயில் நிலையத்தில் மர்மநபர் நடத்திய கோடரி தாக்குதலில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

ஜெர்மனியில் டுயூசெல் டோர்ப் நகரில் ரெயில் நிலையம் உள்ளது. அங்கு நேற்று இரவு 9 மணியளவில் ஏராளமான மக்கள் குவிந்து இருந்தனர். அப்போது அங்கு 36 வயது மர்மநபர் வந்தான். திடீரென தான் வைத்திருந்த கோடரியால் கூடியிருந்த பயணிகளை சரமாரியாக வெட்டினான்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் ஓட்டம் பிடித்தனர். இருந்தும் அவர்களை விரட்டிச் சென்று தாக்குதல் நடத்தினான். அதில் 7 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இதற்கிடையே கோடரி தாக்குதல் நடத்திய ஆசாமி கைது செய்யப்பட்டான். முன்னாள் யூகோஸ்போ வியாவைச் சேர்ந்த இவன் மனநிலை பாதிக்கப்பட்டவன் என போலீசார் தெரிவித்தனர். எனவே, இச்சம்பவம் தீவிரவாத தாக்குதல் இல்லை என கூறியுள்ளனர். தப்பி ஓட முயன்றபோது ரெயில் நிலையத்தின் பாலத்தில் இருந்து குதித்ததால் காயம் அடைந்தான். தற்போது அவன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறான்.