யாழ்நகரில் மின்சார சபையினரால் திருட்டு மின்சார பாவனை சோதனையில் ஈடுபட்டனர்

301 0

யாழ். நகர்ப்பகுதியில் மோசடித் தனமான மின்சாரப் பாவனையில் ஈடுபட்டவர்களை நேற்றைய தினம் இ.மி.சபையின் கொழும்பு பிரிவுனரும் பொலிசாரும் இணைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

யாழ். நகரில் இயங்கிய வர்த்தக நிலையங்களிற்கு மின் இணைப்பினைப் பெற்றிருந்தபோதும் அதிக மின்பாவனைப் பொருட்களான குளிரூட்டிகள் இ மின் விசிறிகளிற்கு திருட்டுத்தனமான மின்சார இணைப்பினை பெற்றிருந்த வர்த்தக நிலையங்கள் மீதே இவ்வாறு சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

குறித்த சோதனையின்போது கடைகளில் உள்ள அதிக மின்பாவனைப்பொருட்களான குளிரூட்டியை ( ஏசி) இயக்க விட்டு பிரதான அழுத்தியை ( மெயின் ) நிறுத்திய போதும் குளிரூட்டி இயங்கியமை அவதானிக்கப்பட்டதையடுத்து தேடுதலில் ஈடுபட்டு மிக நுட்பமான முறையில் மறைத்து மின்சார இணைப்பு பெற்றிருந்தமை கண்டறியப்பட்டது.

இதன்போது இவ்வாறு மின்சாரத்தை மோசடியாகப்பயன்படுத்திய வர்த்தக நிலைய உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர். இவ்வாறு கொண்டு செல்லப்பட்டவர்கள் இன்றைய தினம் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.