வானில் பறந்துகொண்டிருந்த விமானத்தின் அவசர கதவை பயணி திறந்ததால் பரபரப்பு

61 0

தென் கொரியாவை சேர்ந்த ஏசியானா ஏர்லைன்ஸ் விமானம் நேற்று தென்கொரியாவில் உள்ள ஜெஜூ தீவிலிருந்து டேகு நகருக்கு 194 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. விமானம் பறந்து கொண்டிருந்த போது, அவசர கால கதவை பயணி ஒருவர் திடீரென்று திறந்தார்.

கதவு திறந்த நிலையில் காற்று வேகமாக விமானத்துக்குள் வீச ஆரம்பித்தது. இதனால், பயணிகள் நிலைதடுமாறி அச்சத்தில் உறைந்தனர். சிலர் மயக்கமடைந்து விழுந்தனர்.சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக விமானம் டேகு சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

அவசரகால கதவைத் திறந்த 30 வயது மதிக்கத்தக்க நபரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

‘‘ விமானம் தரையிலிருந்து 250 மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது கதவைத் திறந்த அந்த நபர், விமானத்திலிருந்து குதிக்க முயற்சித்தார். விமானப் பணியாளர்களால் கதவை மூட முடியவில்லை. நாங்கள் நிச்சயம் உயிர் பிழைக்க மாட்டோம் என்று நினைத்தோம்” என்று சக பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.