ஆளுநரின் பதவியேற்புக்கு வரும் எந்தவொரு அதிகாரிக்கும் இடையூறு ஏற்படுத்தக்கூடாது!

180 0

வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி. பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் இன்று  திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் யாழ். சுண்டுக்குளியில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.

இந்த நிலையில், அவரது நியமனத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தப்பட்டிருந்தது.

இதையடுத்து, அவர் நாளை பதவியேற்கும் போதும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டமையால், யாழ்ப்பாணப் காவல்துறையினரால் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

ஊடகவியலாளர் சுவர்ணலிங்கம் வர்ணன், சிவசேனா அமைப்பின் சிறீந்திரன், இலங்கை சைவ ஆதின நிலையத்தின் தலைவர் விபுலானந்தன் சுவாமி ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம், நிபந்தனைகளுக்கு உட்பட்டு போராட்டம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அறிவித்துள்ளது.

அதாவது, ஏ – 9 வீதியை மறித்து போராட்டம் நடத்தக் கூடாது, ஆளுநர் அலுவலகச் சூழலில் பரப்புரை முன்னெடுக்கக் கூடாது, ஆளுநர் அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது, ஆளுநரின் பதவியேற்புக்கு வரும் எந்தவொரு அதிகாரிக்கும் இடையூறு ஏற்படுத்தக்கூடாது என நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.