கிழக்கில் பட்டதாரிகள் முன்னெடுத்துவரும் உண்ணாவிரதப் போராட்டத்தை அரசாங்கம் கண்டுகொள்ளாதுள்ளதாக இராஜாங்க அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் கவலைவெளியிட்டுள்ளார்.
கிழக்கில் பட்டதாரிகளின் உண்ணாவிரதப் போராட்டம் குறித்து ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்தித்து பேச்சு நடத்தினாலும் இதுவரை எந்த தீர்வும் பெற்றுக்கொடுக்கப்படவில்லை. அரச தரப்பில் எந்த ஒரு உறுதி மொழியும் வழங்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வறிய பட்டதாரி மாணவர்கள் வெயிலோ, மழையோ பாராது நடத்தும் இந்த போராட்டத்தை கைவிட்டு வாருங்கள் பேச்சு நடத்துகிறோம் என்று கூட கூறுவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை எனவும் அவர் விஷனம் தெரிவித்துள்ளார்.
பட்டதாரிகளின் உண்ணாவிரதம் பாரதூரமானது. இந்த போராட்டம் வேறு வழியில் வெடித்தால் பெரும் பிரச்சினையாக மாறிவிடும் எனவும் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது இராஜாங்க அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

