யாழில் முச்சக்கர வண்டி சாரதிகளை மயக்கி கொள்ளை

164 0

யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர், முச்சக்கர வண்டிகளை வாடகைக்கு அமர்த்தி சாரதிகளின் நகை மற்றும் பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

ஒரே நாளில் இரு முச்சக்கர வண்டி சாரதிகளிடம் இருந்து நகைகள் மற்றும் பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

பருத்தித்துறையில் இருந்து நேற்று வியாழக்கிழமை, முச்சக்கர வண்டியொன்றை வாடகைக்கு அமர்த்தி கீரிமலையில் உள்ள காணிகளை பார்க்கவென பெண்ணும், இரண்டு ஆண்களும் கீரிமலை பகுதிக்கு வந்துள்ளனர்.

கீரிமலையில் முச்சக்கர வண்டி சாரதிக்கு குளிர்பானத்திற்குள் மயக்க மருந்து கலந்து கொடுத்து விட்டு சாரதியிடம் இருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

அந்த கும்பல்,  கீரிமலையில் இருந்து பருத்தித்துறை செல்ல பிறிதொரு முச்சக்கர வண்டியை வாடகைக்கு அமர்த்தி பருத்தித்துறைக்கு செல்லும் வழியில் குறித்த சாரதிக்கும் குளிர்பானத்திற்குள் மயக்க மருந்து கலந்து கொடுத்து விட்டு சாரதியிடம் இருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து  சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை மற்றும் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேவேளை கீரிமலையில் மயக்கமடைந்த முச்சக்கர வண்டி சாரதி தெல்லிப்பழை வைத்தியசாலையிலும், மற்றையவர்  பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.