தேர்தலை நடத்த வேண்டும் அல்லது வேட்பு மனுக்களை இரத்துச் செய்ய வேண்டும்

159 0

ள்ளூராட்சி மன்றத் தேர்தல் விவகாரம் இழுபறி நிலையில் உள்ளதால் விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அரசியலமைப்புக்கு அமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த வேண்டும் அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்களை இரத்து செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

எதுல் கோட்டை பகுதியில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

நகர சபைகள் மற்றும் பிரதேச சபை தேர்தல் சட்டத்தின் பிரகாரம், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் மாதம் 9ஆம் திகதி நடத்துவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த ஜனவரி மாதம் 21ஆம் திகதி அறிவித்தது.

தேர்தல் தொடர்பில் நிதியமைச்சுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளாமல் ஆணைக்குழு தேர்தல் தொடர்பான அறிவிப்புக்களை விடுத்ததால் நிதி விடுவிப்பை நிதியமைச்சு முடக்கியது.

தேர்தல் ஆணைக்குழு வாக்கெடுப்புக்கு திகதி அறிவிப்பதும் பின்னர் நிதி நெருக்கடியால் தேர்தல் வாக்கெடுப்பு ஒத்திவைப்பதும் வழமையாகிவிட்டது.

தேர்தல்கள் ஆணைக்குழு, நிதியமைச்சு ஆகிய தரப்பினரது முரண்பாடான செயற்பாடுகளினால் வேட்பு மனுத் தாக்கல் செய்து விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

தேர்தல் சட்டத்தின் 102ஆவது உறுப்புரையில், ‘தேர்தல் ஒன்றுக்கு போட்டியிட தீர்மானிக்கும் அரச சேவையாளர் வேட்பு மனு தாக்கல் செய்து, தேர்தல் பணிகள் நிறைவு பெறும் வரை சேவையில் ஈடுபடக்கூடாது’ என குறிப்பிடப்பட்டுள்ளது. விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்குவது  தொடர்பில் தேர்தல் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை.

தேர்தல் இழுபறி நிலையில் உள்ள பின்னணியில் விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்களுக்கு அடிப்படை சம்பளத்தை மாத்திரம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தற்போதைய பொருளாதார பாதிப்பு, வாழ்க்கைச் செலவுக்கு மத்தியில் அடிப்படை சம்பளத்தை கொண்டு எவ்வாறு தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும்.

தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும். அரசியலமைப்புக்கு அமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த வேண்டும் அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்களை இரத்து செய்ய வேண்டும். அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாட்டினால் அரச சேவையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றார்.