சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் 3-வது மாடியில் இருந்த ஏசி இயந்திரம் கழன்று கீழே விழுந்ததில், மருத்துவமனை ஊழியர் உயிரிழந்தார்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை ஆதிகேசவன் தெருவைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு(62). இவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், அறுவை சிகிச்சைப் பிரிவில்டெக்னீஷியனாகப் பணியாற்றினார். பணி ஓய்வுக்குப் பிறகு, அதே மருத்துவமனையில் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் ஒப்பந்த ஊழியராகப் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், நேற்று காலைவழக்கம்போல பணிக்கு வந்ததிருநாவுக்கரசு, மருத்துவமனையின் டவர் கட்டிடம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்தக் கட்டிடத்தின்3-வது மாடியில் பொருத்தப்பட்டிருந்த ஏசி இயந்திரம் திடீரென கழன்று கீழே விழுந்தது.

அப்போது, கீழே நடந்து சென்று கொண்டிருந்த திருநாவுக்கரசு மீது ஏசி இயந்திரம் விழுந்ததில், அவர் பலத்த காயமடைந்தார். மயங்கி விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

