யாசகத்தில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படுவது அதிகரிப்பு: மதுரையில் 5 ஆண்டுகளில் 113 குழந்தைகள் மீட்பு – ஆர்டிஐ அதிர்ச்சி

143 0

 மதுரையில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் சம்பவம் அதிகரித்துள்ளதாகவும், கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுவரை 113 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் ஆர்டிஐ-யிலிருந்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை மாநகர் பகுதியில் சாலை சந்திப்புகள் மற்றும் சாலை ஓரங்களில் குழந்தைகள் (யாசகம்) பிச்சை எடுக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, மதுரை மாநகர் மேலமடை, ஆவின் சந்திப்பு, காளவாசல்,பெரியார் பேருந்து நிலையம், கோரிப்பாளையம் பகுதியில் அதிக அளவு குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்து வருகிறார்கள், இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் தனியார் தொலைக்காட்சி கேட்ட கேள்வி ஒன்றுக்கு, மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அளித்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் கடந்த 2018 ஆண்டு 4 குழந்தைகளும், 2020 ஆண்டு 15 குழந்தைகளும், 2021 ஆண்டு 38 குழந்தைகளும், 2022 ஆண்டு 56 குழந்தைகளும் என மொத்தம் 113 குழந்தைகள் மீட்கபட்டுள்ளதாகவும், மேலும் மதுரை மாநகர் பகுதியில் மட்டும் கடந்த 2018 முதல் 2022 வரை குழந்தையை கடத்தி விற்க முயன்றதாக 4 குழந்தைகள் மீட்கபட்டுள்ளதாகவும், அதேபோல் 2018 முதல் 2022ஆம் ஆண்டு வரை சுமார் 19 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு பெற்றோர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும், மதுரை மாநகர் பகுதியில் அதிக அளவு பிச்சை எடுக்கும் குழந்தைளை மீட்க மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகு மூலம் சிறப்புக் குழு நியமித்து குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்க வைக்கும் கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குழந்தைகளை மீட்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.